Published : 28 Jun 2019 09:27 AM
Last Updated : 28 Jun 2019 09:27 AM

விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு: பன்றிக் கழிவு தொட்டியை சுத்தம் செய்தபோது சம்பவம்

கோவை அருகே பன்றிக் கழிவு இருந்த தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.

கோவை சத்தி சாலை கணபதி அருகேயுள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (70). இவர், கோவில்பாளையம் அருகேயுள்ள கீரணத்தம் லட்சுமி கார்டனில் பன்றி வளர்ப்புக் கூடம் வைத்துள்ளார்.

பன்றிகளின் கழிவை சேகரித்து வைக்க 10-க்கு 14 அடி நீள அகலத்தில், 10 அடி ஆழத்தில் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக கோவில்மேட்டை சேர்ந்த ராஜப்பன்(38), பெ.வேடியப்பன்(29), பொ.வேடியப்பன் (26), ரமேஷ், சரவணன், பாபு ஆகிய 6 பேரை சுப்பிரமணியம் நேற்று அழைத்து வந்துள்ளார்.

தொட்டிக்குள் முதலில் இறங்கிய ராஜப்பன், விஷவாயு தாக்கி மயங்கினார். இதைப் பார்த்த பெ. வேடியப்பன், பொ.வேடியப்பன் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கி ராஜப்பனை மீட்க முயன்றனர். அப்போது இவர்களும் விஷ வாயு தாக்கி தொட்டிக்குள்ளேயே மயங்கினர். மயங்கிய மூன்று பேரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.

கணபதி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மூவரது சடலங்களையும் மீட்டனர். சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர்.

தருமபுரியை சேர்ந்தவர்கள்

விஷ வாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரும், இவர்களுடன் வந்த மற்ற மூன்று பேரும் தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உட்பட மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த 15 குடும்பத்தினர், கடந்த சில ஆண்டுகளாக கோவை கோவில்மேட்டில் உள்ள சிம்சன் நகரில் வசித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கீரணத்தம் உள்ளாட்சிக்கு உட்பட்ட அதிகாரிகள், தாலுகா அதிகாரிகளும் அங்கு விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கோவில் பாளையம் போலீஸார் கூறும்போது, ‘‘பன்றிக் கழிவுத் தொட்டி சில தினங்களுக்கு முன்னர் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. நேற்று தண்ணீரை ஊற்றி இறுதி கட்ட சுத்தம் செய்யும் பணிக்கு, உள்ளே இறங்கிய போது, மூவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, உரிமையாளர் சுப்பிரமணியத்தை கைது செய்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

கழிவுத் தொட்டி சுத்தப்படுத்தும் பணியில் ஆட்களை ஈடுபடுத்தக்கூடாது என மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து கழிவு தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களை ஈடுபடுத்தும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பன்றி வளர்ப்புக் கூடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் சீல் வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x