Published : 28 Jun 2019 07:59 AM
Last Updated : 28 Jun 2019 07:59 AM

கோவையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு இளைஞர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி: 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை

கோவையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு இளைஞர் களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அவர் களை, தனி இடத்தில் வைத்து மாநகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பு உடையவர்கள் தமிழகத் தில் இருப்பதாக கிடைத்த தகவ லையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 12-ம் தேதி கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் (32), போத்தனூர் திருமறை நகரைச் சேர்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா (38), இப்ராஹிம் என்ற ஷாகிம்ஷா (28) குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர் (29), போத்தனூர் உமர் நகரைச் சேர்ந்த சதாம் உசேன் (26) ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த இளைஞர்களை திரட்டியதாகவும், அந்த அமைப்புக்காக நிதி திரட்டிய தாகவும் முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்த னர். அதைத் தொடர்ந்து, ஷேக் இதாயத்துல்லாவுக்கு தடை செய்யப்பட்ட ஸ்டூடன்ட் இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் இந்தியா (சிமி) அமைப்புடன் தொடர்பு இருந்ததை உறுதி செய்து, அவரையும் கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். மற்ற 4 பேரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பின்னர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல் பட்டு, கோவையில் சதிச்செயல் களை அரங்கேற்ற திட்டம் தீட்டிய தாக உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், கரும்புக்கடையைச் சேர்ந்த ஷேக் சபியுல்லா ஆகியோரை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) 18, 38, 39 ஆகிய பிரிவுகளின் கீழ் கோவை மாநகர போத்தனூர் போலீஸார் கடந்த 15-ம் தேதி கைது செய் தனர்.

பின்னர் அவர்களை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சதி திட்டத்துக்கு ஆலோசனை

கைது செய்யப்பட்ட 3 பேரும் கரும்புக்கடையில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி சந்தித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பற்றி ஆலோசித்து வந்துள்ளனர். அப்போது தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான துண்டுப் பிரசுரங்க ளையும் அவர்கள் உடன் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சார்ந்த வீடியோ காட்சிகளை மற்றவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளனர். கோவை யில் கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்போல் நடத்தி, உயிரிழப்பு ஏற்படுத்த திட்டமிட்டு இருந் தது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கைது செய்யப் பட்ட 3 பேரிடமும் இருந்து சதி திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற போலீஸார் திட்டமிட்டனர். அதற்காக ஷாஜ கான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகியோரை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாநகர தெற்கு உட்கோட்ட உதவி ஆணையரும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யுமான செட்ரிக் இமானுவேல் மனு தாக்கல் செய்தார்.

ரகசிய இடத்தில்..

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல், முகமது உசேன் உள்ளிட்ட 3 பேரையும் 5 நாள் (ஜூலை 2 வரை) காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதை யடுத்து, 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்ற னர். ‘ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது, இவர்களுக்கு தெரிந்து வேறு யாரெல்லாம் இந்த அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர், இவர் கள் கோவையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு ஏதாவது இடங் களை பட்டியலிட்டு உள்ளனரா, ரகசியமாக சென்று கண்காணித் தனரா, வேறு பயங்கரவாதி களுடன் தொடர்பில் உள்ளனரா என பல்வேறு கேள்விகளுடன் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரி வித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x