Published : 28 Jun 2019 09:45 AM
Last Updated : 28 Jun 2019 09:45 AM

தமிழகம் முழுவதும் காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள போலீஸாரை வெளியேற்றுங்கள்: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருக்கும் போலீஸாரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் டி.எம்.தேவராஜன். இவர் ரூ.1,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து 2007-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2008 ஜூலையில் ஓய்வுபெற வேண்டும். ஆனால் துறைரீதியான விசாரணை நிலுவையில் இருப்பதாக கூறி ஓய்வுபெற அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை குற்றப்பிரிவு காவலர் குடியிருப்பில் 2006 முதல் 2013 வரை அனுமதியின்றி வசித்ததற்காக ரூ.2,22,740 வாடகை பாக்கி செலுத்தக்கோரி தேவராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சட்டவிரோதச் செயல்கள், நடத்தை விதி மீறலில் ஈடுபடும் போலீஸார் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகையோர் மீது நீதிமன்றம் கருணை காட்டக்கூடாது.

தமிழகத்தில் ஏராளமான போலீஸார், காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருந்து வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் காவலர்கள் குடியிருப்பில் நேரில் ஆய்வு செய்து அனுமதியின்றி குடியிருந்து வரும் காவலர்களின் பட்டியலைத் தயாரிக்க டிஜிபி தனி குழு அமைக்க வேண்டும். இக்குழுவின் ஆய்வு அடிப்படையில் சட்டவிரோதமாக குடியிருப்போரை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x