Published : 20 Sep 2018 09:27 AM
Last Updated : 20 Sep 2018 09:27 AM

திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதியை 3 நாட்களில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: மகா தேஜோ மண்டல சபாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி சமாதியை 3 நாட் களுக்குள் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ‘மகா தேஜோ மண்டல சபா’ அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மகா தேஜோ மண்டல சபா அமைப்பின் செயலா ளர் எம்.ஜெயராமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ராமேசுவரத்தில் 1850-ம் ஆண்டு பாம்பன் சுவாமி என்ற ஸ்ரீ பாம்பன் குமரகுரு தாசர் பிறந்தார். இவர் முருகக் கடவுள் பற்றி தமிழில் 6,666 பாடல்களைப் பாடினார். சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வசித்த இவர், 1929-ம் ஆண்டு மே 30-ம் தேதி காலமானார். இவரது உடல், சென்னை திருவான்மியூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

3.02 ஏக்கர் நிலம்

அந்த இடத்தில் சமாதி கட்டு வதற்காக எங்கள் சபா சார்பில் 3.02 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சமாதி மீது கட்டிடம் கட்டி 1940-ம் ஆண்டு முதல் குருபூஜை, சித்ரா பவுர்ணமி பூஜை, அருணகிரிநாதர் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட் டன. இந்நிலையில், 1984-ம் ஆண்டு, சபா நிர்வாகிகள், உறுப்பினர்களி டம் கலந்து ஆலோசிக்காமல் சபா செயலாளர் டி.டி. குப்புசாமி செட்டியார், இந்த சமாதியை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைத்தார்.

இதை எதிர்த்து சபா தொடர்ந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இந்த உத்த ரவை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய் தன. ஆனால், இதுவரை பாம்பன் சுவாமி சமாதியை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. எனவே, சமாதியை சபாவிடம்

ஒப்படைக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா, பாம்பன் சுவாமி சமாதியை மகா தேஜோ மண்டல சபாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதை யடுத்து பாம்பன் சுவாமி சமாதி நிர்வாகத்தை மகா தேஜோ மண் டல சபா எடுத்துக் கொண்டது.

இதனிடையே, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை மேல் முறையீடு செய்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலு வாடி ஜி.ரமேஷ், கே.கல்யாண சுந்தரம் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

இவ்வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது. பாம்பன் சுவாமி சமாதியைமகா தேஜோ மண்டல சபா 3 நாட் களுக்குள் இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் சம் பந்தப்பட்ட சபா நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x