Published : 29 Sep 2018 09:42 PM
Last Updated : 29 Sep 2018 09:42 PM

பிக்பாஸ்-2 வெற்றியாளர் ரித்விகா?- இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுகிறார் ஐஸ்வர்யா?

பிக்பாஸ்-2 சீசன் பல கட்டங்களை கடந்துள்ளது. இதன் வெற்றியாளரை யார் என்பது நாளை தெரிய உள்ளது. நான்கு போட்டியாளர்களில் ரித்விகா வெல்வார் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் இரண்டுக்காக போட்டியாளர்கள் கடந்த 100 நாட்களுக்கு முன் களம் இறக்கப்பட்டனர். பிக்பாஸ் ஒன்றை கண்டுகளித்த பார்வையாளர்கள் இரண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என ஆர்வத்துடன் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

ஆனால் பிக்பாஸ் பார்வையாளர்கள் போலவே போட்டிக்கு தேர்வானவர்களும் தயாராக வந்திருந்தனர். பல மொழிகளில் உள்ள பிக்பாஸ் போட்டிகளைப் பார்த்து, சீசன் ஒன்றின் முழு எபிசோடைப்பார்த்து எப்படி விளையாட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்தனர். அதனால் போலி நடிப்புத்திறன்தான் வெளிப்பட்டது.

பிக்பாஸ் ஒன்றின் கதாநாயகி ஓவியா. அவரது வெளிப்படையான பேச்சு, தைரியம், துணிச்சல், குழந்தைத்தனம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அதன் விளைவு ஓவியா சூப்பர் ஸ்டார் லெவலுக்கு இன்றும் பார்க்கப்படுகிறார்.

இதை குறிப்பிடக்காரணம் ஓவியாவைப் பார்த்து சீசன் ஒன்றில் இடையில் உள்ளே வந்த சுஜா போன்றோர் அதேபோன்று நடக்க முயன்று மூக்கறுப்பட்டனர். அதே போன்ற மனநிலையில் பிக்பாஸ் சீசன் இரண்டில் பல பெண்கள் வந்தனர். இதில் முதன்மையானவர் ஐஸ்வர்யா. அவர் தன்னை ஓவியாவாக பாவித்து அதன்படி போட்டியை வெல்லலாம் என்று வந்தார்.

வேறு சிலருக்கும் அந்த எண்ணம் இருந்தது. ஆனால் இயல்பை யாராலும் மாற்ற முடியாது. ஒருவர்போல் இன்னொருவர் வர முடியாது. 100 நாட்கள் ரியாலிட்டி ஷோவில் என்னதான் பிக்பாஸ் எடிட் செய்து காட்டினாலும் இயல்பை மாற்ற முடியாது. அதனால் பலரும் பல சந்தர்ப்பங்களில் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர்.

பிக்பாஸ் போட்டியில் ஆர்ப்பாட்டமாக வந்தவர்கள், மேல்தட்டு பழக்கவழக்கங்களில் ஊறிப்போனவர்கள், செயற்கையான தழுவல்கள், ஆரவாரமான ஆங்கிலம் போன்ற சாயங்கள் போகப்போக வெளுக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஒரமாக ஒதுங்கிபோனார் ரித்விகா.

யாரும் அவருடன் ஒட்டவில்லை. இதற்கு அவர்கள் மேல்தட்டு பாணியில் ஜெல்லாகவில்லை என்று கூறினர். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ஒவ்வொருவராக தங்களை வெளிப்படுத்தி மக்கள் மனதிலிருந்து வெளியேறியதால் வெளியேற்றப்பட்டார்கள்.

சாதாரணமாக பார்க்கப்பட்ட பொன்னம்பலம், சென்றாயன், ரித்விகா, பாலாஜி, மும்தாஜ், ஜனனி போன்றோர் தாக்குப்பிடித்தனர். இதில் பொன்னம்பலம் மிக வெளிப்படையாக இருந்தார். ஆனாலும் அவரை தொடர்ந்து ஐஸ்வர்யா, மகத், யாஷிகா டீம் நாமினேட் செய்து வெளியேற்றியது.

மும்தாஜ், டேனி இருவருக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தும் தங்கள் தனித்தன்மையை மாற்றி சேராத இடந்தனில் சேர்ந்ததால் வெளியேற்றப்பட்டனர். சென்றாயன் வெளியேற்றப்பட்டவிதம் அனைவரும் அறிந்ததே. கமலே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாலாஜி இறுதிவாரம் வரை வந்ததே பெரிய சாதனை. பின்னர் அவர் வெளியேறினார். யாஷிகா மிகச்சிறந்த தந்திரக்காரர். ஆட்டத்தை ஆட்டமாக ஆடியவர். ஆனால் ஆரம்பத்தில் மகத்துடனும், யாஷிகாவுடனும் அவர் ஆடிய ஆட்டம் மக்களுக்கு கடும் கோபம் இருந்தது. இறுதியில் அவரும் வெளியேற்றப்பட்டார்.

விஜயலட்சுமி இடையில் வந்தவர் என்பதால் அவர் வெற்றிப்பெற வாய்ப்பில்லை. ஜனனி பிரபலமானவராக இருந்தாலும் சீசன் ஒன்று பிந்து மாதவி போல் அமைதியாக நடந்ததால் தாக்குப்பிடித்து இறுதிவரை வந்துள்ளார். ஆனாலும் அவரது நிலையற்ற மனது அவரை வெற்றிக்கனியை பறிக்க விடாது.

ஆரம்பத்தில் பெரிதாக பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா தனது சிறுபிள்ளைத்தனமான செயலால் மக்கள் மனதிலிருந்து தூக்கி எறியப்பட்டார். திரும்ப திரும்ப தனது நேர்மையற்ற செயலால் அவர் ஒதுக்கப்பட்டாலும், அவரை காப்பாற்றும் முயற்சி தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

மறுபுறம் ரித்விகா தனது அமைதியான, அழுத்தமான நடத்தையால் பொதுமக்களிடமும், சக போட்டியாளர்களிடமும் தான் யாரென்று நிருபித்துள்ளார். அதனால் நாளை நடக்கும் வெற்றிவிழாவில் ரித்விகா தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த தேர்வை ஐஸ்வர்யாவும் ஏற்றுக்கொள்வார்.

கடந்த முறை ஆரவ், சிநேகன் இடையே கடும் போட்டி இருந்தது. இம்முறை ரித்விகாவே போட்டியில் முந்துகிறார். ஆகவே ரித்விகா வெற்றியாளர் ஆவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x