Published : 13 Sep 2018 08:08 AM
Last Updated : 13 Sep 2018 08:08 AM

சென்னை - சேலம் 8 வழி திட்டத்தில் மாற்றம்: நிதி குறைப்பு; சாலையின் அகலமும் குறைகிறது 

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அதிகளவில் நிலம் எடுப்பதை குறைப்பதற்காக சாலையின் அகலம் 90 மீட்டரில் இருந்து 70 மீட்டராக குறைக்கப்படுகிறது.

சென்னை சேலம் நெடுஞ் சாலைகளில் செல்லும் வாகனங் களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரிக்கும் என்பதால் தமிழக அரசு சென்னை முதல் சேலம் வரையில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச் சாலையை அமைக்க திட்டமிட்டது. மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் இந்த பசுமைச்சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ண கிரி, சேலம் ஆகிய மாவட்டங் களில் அமையவுள்ள இந்த சாலைக் கான திட்டத்தில் 23 பெரிய பாலங்கள், 156 சிறிய பாலங் கள், 9 மேம்பாலங்கள், வாகனங் களுக்கான 22 கீழ் வழிப்பாதைகள், 2 பாலங்களுடனான கீழ்வழிப் பாதைகள், வனப்பகுதியில் 3 சுரங்கப்பாதைகள், 8 சுங்கச் சாவடிகள், 10 பேருந்து மற்றும் லாரி நிறுத்தங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இத்திட்டத் துக்கு சுமார் 2,560 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்தால் விளைநிலங்களும் கிராமங்களும் பாதிக்கப்படும் என்று கூறி விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த சாலை அமையவுள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. பெரும்பாலான விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் 8 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் மாற்றுப்பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு வலியுறுத்தி னர். அதன்படி, தற்போது இத்திட்டத் தில் பல்வேறு மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை செய்துள்ளது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் பாலானோர் விளை நிலத்தை கையகப்படுத்தாமல், மலைகளை அழிக்காமல் மாற்றுப்பாதையில் சாலையை அமைக்க வேண்டுமென கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் 8 வழி சாலைத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து சுற்றுச்சூழல் அமைச் சகத்திடம் புதிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு நிலம் எடுப்பதைத் தவிர்க்க சாலையின் அகலம் 90 மீட்டரில் இருந்து 70 மீட்டராக குறைக்கப்படுகிறது. 300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப் படுத்தப்படும். சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படாது, நிலத்தை சிக்க னமாக பயன்படுத்தவுள்ளோம்.

சேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதி யில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும். வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.7,210 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த சாலை 6 வழிச்சாலையாகவும் இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறி னர்.

முக்கிய மாற்றங்கள் என்ன?

திட்ட மதிப்பீடு ரூ.10 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.7,210 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சாலையின் மொத்த தூரம் குறைக்கப்படவில்லை.

120 ஹெக்டேர் வனப்பகுதிக்கு பதிலாக 45 ஹெக்டேர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும்.

சாலையின் அகலம் 90 மீட்டரிலிருந்து 70 மீட்டராக குறைக்கப்படும். ஒட்டுமொத்தமாக 2,560 ஹெக்டேருக்கு பதில் 1,900 ஹெக்டேர் நிலம்தான் கையகப்படுத்தப்படும்.

8 வழிச்சாலையோடு இணைப்புச் சாலையாக (சர்வீஸ்) அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 3 சாலைகள் அமைக்கப்படாது. கல்வராயன் மலை பாதிக்காதபடி செங்கம் முதல் சேலம் வரையிலான சாலை வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கம் அரூர் - அயோத்தியா பட்டிணம் - சேலம் வழியாக சாலை அமையும். இதன் நீளம் 110 கி.மீ. இதில் பள்ளிபட்டி, வேளம்பட்டி, காப்புக்காடு பகுதிகளில் 2.64 கி.மீ. தூரத்துக்கு உயர்த்தப்பட்ட சாலைகள் அமைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x