Published : 25 Sep 2018 01:54 PM
Last Updated : 25 Sep 2018 01:54 PM
திருமுருகன் காந்தியின் உடல் நலன் கருதி அவரை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி மீது, ஏராளமான வழக்குகளை ஜோடித்து வேலூர் மத்திய சிறைச்சாலையில்அடைக்கப்பட்டுள்ளார். திருமுருகன் காந்தி ஆயுதம் ஏந்தி வன்முறை செயலில் ஈடுபட்டவர் அல்ல. சட்டத்திற்கு புறம்பான முறையில் செயல்பட்டவரும் அல்ல. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்துக்களை கூறிவந்தார். இயக்கங்களை நடத்தி வந்தார்.
திருமுருகன் காந்தி மீது பல்வேறு பிரிவுகளில் ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவுக்கு வழக்குகள் போடப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள திருமுருகன் காந்தி மிகக் கடுமையான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. அவரது உடல் நலன் கருதி உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்” என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT