Published : 19 Sep 2018 09:41 AM
Last Updated : 19 Sep 2018 09:41 AM

சிறையில் சொகுசு வாழ்க்கை விவகாரம்: கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை; கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமனம்

தமிழகம் முழுவதும் சிறைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளின் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அதைத் தொடர்ந்து புழல், கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். புழல் தலைமை வார்டன்கள் 2 பேர், முதல்நிலை வார்டன்கள் 6 பேர் இடமாற்றமும் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கைதிகளை பார்க்க அனுமதிக்கப் படுகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இவற்றில் 22,792 கைதிகளை அடைத்து வைக்கலாம். ஆனால், தற்போது தமிழக சிறைகளில் 14,748 கைதிகள்தான் உள்ளனர். வார நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்தித்துப் பேசலாம்.

வெளி உணவுகள்

ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 முதல் மதியம் 1 வரை குழந்தைகளை அழைத்து வந்து காட்டலாம். அன்றைய தினம் குழந்தைகள் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதற்கும், அவர்களை தூக்கி வைத்து கொஞ்சுவதற்கும் அனுமதி உண்டு. பேக்கரி பொருட்கள், பழங்கள் போன்றவற்றை கைதிகளுக்கு கொடுக்கவும் அனுமதி உண்டு.

ஆனால், தற்போது இவை அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்களின் எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கைதிகளுக்கு உணவுப் பொருட்கள் கொடுப்பதிலும் கெடுபிடிகள் தொடங்கியுள்ளன.

முன்பு கைதிகளுடன் உறவினர் கள் பேசும்போது சிறைக்காவலர்கள் சிறிது தூரம் தள்ளியிருந்துதான் கண்காணிப்பார்கள். தற்போது பார்வையாளர்கள், கைதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க அனைத்து சிறைகளிலும் கூடுதல் போலீஸார் போடப்பட்டுள்ளனர்.

இதனால் கைதிகள் - உறவினர்கள் அருகிலேயே சிறைக்காவலர்கள் நின்று கொண்டு அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மூலம்தான் சிகரெட், பீடி, கஞ்சா போன்றவை சிறைக்குள் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் வழக்கமாக ஒருமுறை மட்டுமே சோதனை நடத்தப்படும். தற்போது ஒவ்வொருவரையும், அவர்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களையும் 3 முறை சோதனைக்கு உட்படுத்துகின்றனர். கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மூலம்தான் சிகரெட், பீடி, கஞ்சா போன்றவை சிறைக்குள் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x