Published : 25 Sep 2014 01:53 PM
Last Updated : 25 Sep 2014 01:53 PM

13.5 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது: கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 போலீஸ்காரர்களிடம் தீவிர விசாரணை

சென்னை விமான நிலையத்தில் 13.5 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. தங்கத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த பெண், புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடந்தையாக இருந்த 2 போலீஸ்காரர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த சித்திக் அலி (28) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த சூட்கேசில் 5 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்க கடத்தலுக்கு விமான நிலைய குடியுரிமைப் பிரிவு போலீஸ்காரர்கள் பால்ராஜ் மற்றும் சவுந்தர்ராஜன் ஆகியோர் உடந்தையாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த சித்திக் அலியை கைது செய்து, உடந்தையாக இருந்த 2 போலீஸ்காரர்களை விசாரணைக்காக தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பெண்ணிடம் 5 கிலோ தங்கம்

சென்னையைச் சேர்ந்த விஜயலதா (45) பஹ்ரைனில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 4 மணிக்கு வந்தார். சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவருடைய சூட்கேசில் 5 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. அவற்றை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியதில், தங்க கடத்தலுக்கு விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உதவியாக இருந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடிக்க அதிகாரிகள் சென்றனர். ஆனால், அவர் தப்பிச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணைக் காக விஜயலதா அழைத்துச் செல்லப்பட்டார்.

கழிப்பறையில் 3.5 கிலோ தங்கம்

இவை தவிர சென்னை விமான நிலையத்தின் கழிவறையில் மர்ம பை ஒன்று இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பையை எடுத்துப் பார்த்தனர். அதில் 3.5 கிலோ தங்கம் இருந்தது.

கடத்தல் கும்பல் மூளைச் சலவை

சென்னை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. விமான நிலையத்தில் இருந்து தங்கத்தை பாதுகாப்பாக கொண்டுவர உதவி செய்தால் கமிஷன் தருகிறோம் என பாதுகாப்பு அதிகாரிகளை கடத்தல் கும்பல் மூளைச் சலவை செய்கிறது.

பணத்துக்கு ஆசைப்பட்டு சில அதிகாரிகள், தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் அதிகளவில் கடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த குடியுரிமைப் பிரிவு அதிகாரி ஒருவர் பிடிபட்டார். தற்போது குடியுரிமைப் பிரிவு போலீஸ்காரர்கள் 2 பேர் பிடிபட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x