Last Updated : 25 Sep, 2014 01:19 PM

 

Published : 25 Sep 2014 01:19 PM
Last Updated : 25 Sep 2014 01:19 PM

‘வாட்ஸ் அப்’மூலம் சிக்கிய போதை பாகன்: யானையை துன்புறுத்திய வீடியோ பரவியதால் வனத்துறை வழக்கு

மதுரையில் யானையைத் துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் மூலம் பரவியதை அறிந்த வனத்துறை அந்த யானை பாகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

மதுரை உத்தங்குடி அருகே நேற்று மாலை மாலாட்சி என்ற 30 வயதுடைய பெண் யானையை பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பாகன் சுந்தர் (26) என்பவர் மதுரை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது சுந்தர் மது அருந்திய நிலையில் இருந்ததால் யானை மீது ஏற முயற்சிப்பதும், அடிக்கடி தடுமாறி கீழே விழுவதுமாக இருந்தார். அந்த சமயங்களில் யானை சாலையின் நடுப்பகுதி வரை சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிகழ்வை வேடிக்கை பார்க்க சாலையோரத்தில் கூட்டம் கூடியது.

அப்போது அங்கிருந்த சிலர் பாகனின் நடவடிக்கைகளை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப் மூலம் பரவவிட்டனர். மேலும் மாவட்ட வன அலுவலர் நிகர் ரஞ்சனின் செல்போனுக்கும் அனுப்பி வைத்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வனச்சரகர் குமரேசனுக்கு தகவல் கொடுத்தார். உயர் நீதிமன்றம் சென்றுவிட்டு எதேச்சையாக அந்த வழியாக வந்த குமரேசன் உடனடியாக அந்த யானை பாகனை மடக்கி யானையுடன் வன அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.

விசாரணையில் உலகனேரி பகுதியில் ஓடும் வாய்க்காலில் யானையை குளிப்பாட்டிவிட்டு திருப்பி அழைத்து வந்ததாக அவர் கூறினார்.

ஆனாலும் போதையில் யானையை துன்புறுத்தியதால் வனவிலங்குகள் வன்கொடுமை தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றத்துக்காக ரூ.50,000 அபராதம் செலுத்த நேரிடலாம் எனவும் தவறினால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x