Published : 04 Sep 2018 09:18 PM
Last Updated : 04 Sep 2018 09:18 PM
மண்ணடியில் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த மாணவியிடம் அர்ச்சகர் பாலியல் தொல்லைக் கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா (15) பெயர் மாற்றப்பட்டுள்ளது) அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். சுஜாதாவுக்கு தெய்வ பக்தி அதிகம். வாரத்தில் பெரும்பாலான நாட்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு வந்து வணங்கிச் செல்வார்.
மாணவி கோவிலுக்கு வரும்போதெல்லாம் அங்குள்ள அர்ச்சகர் நடராஜ் பூஜை செய்து பிரசாதம் வழங்குவது வழக்கம். அர்ச்சகர் என்ற மரியாதையுடன் சுஜாதா அவருடன் பழகி வந்தார். அடிக்கடி பார்த்து பழகியதால் சாதாரணமாக பழகி வந்துள்ளார்.
சுஜாதாவிடம் அன்பாக பழகி அவரது மதிப்பைப் பெற்ற நடராஜுக்கு தவறான எண்ணம் உருவாகியது. இதையடுத்து சுஜாதாவை வழியில் சந்திப்பது போல் நடித்து சாதாரணமாக பேசுவது போல் நடித்து கோவிலுக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று பேசியுள்ளார்.
பழகியவர்தானே என்று சென்ற சுஜாதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. தனியான இடம் என்றவுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுஜாதா அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
அர்ச்சகரின் நடத்தை குறித்து மாணவியின் பெற்றோர் துறைமுகம் போலீஸில் புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த போலீஸார் அர்ச்சகர் நடராஜன் மீது தவறு உள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அர்ச்சகர் நடராஜனை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT