Published : 16 Sep 2014 09:06 AM
Last Updated : 16 Sep 2014 09:06 AM

சென்னையில் திமுக முப்பெரும் விழா: 4 பேருக்கு விருது வழங்கினார் கருணாநிதி

திமுக சார்பில் சென்னையில் நடந்த முப்பெரும் விழாவில் நடிகர் குமரிமுத்து உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் 4 பேருக்கு விருதுகளை கருணாநிதி வழங்கினார். ஆட்டோ ஓட்டுநர்கள் 7 பேருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து திமுக சார்பில் முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த விழாவுக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். விருதுகள் மற்றும் பரிசுகளை திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார்.

பெரியார் விருதை பெங்களூரை சேர்ந்த சண்முகம், அண்ணா விருதை முனவர் ஜான், பாவேந்தர் விருதை புதுக்கோட்டை விஜயா, கலைஞர் விருதை நடிகர் குமரிமுத்து ஆகியோர் பெற்றனர். விருது பெற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான பொற்கிழியும், கேடயமும் வழங்கப்பட்டது.

திமுக அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. முரசொலி அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பாடல் ஒப்பித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நிதி, சிறந்த ஆட்டோ டிரைவர்கள் 7 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் பொற்கிழி மற்றும் சான்றிதழ்களை கருணாநிதி வழங்கினார்.

விழாவில் அன்பழகன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பேசினர். பின்னர் கருணாநிதி சிறப்புரை ஆற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x