Published : 24 Sep 2018 12:08 PM
Last Updated : 24 Sep 2018 12:08 PM

இறந்தவர் கணவர் எனத் தெரியாமலேயே ரத்தக்கறையைச் சுத்தம் செய்த செவிலியர்: சடலத்தைக் கட்டியணைத்து உருக்கம்

 சேலம் மாவட்டம் ஓமலூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர் தனது கணவர் எனத் தெரியாமலேயே அவரின் ரத்தக்கறையைச்  செவிலியர் ஒருவர் சுத்தம் செய்த அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள மேச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (45). இவர் திமுக மாவட்டப் பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சிவகாமி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதியருக்கு 12 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வழக்கம்போல சிவகாமி பணிக்காக மருத்துவமனை வந்துவிட்டார். அவரது கணவர் மேச்சேரியில் இருந்து தன் இருசக்கரவாகனத்தில் சொந்த வேலைக்காக சேலம் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஓமலூர் அருகே பச்சனம்பட்டி எனுமிடத்தில் போன் பேசுவதற்காக வாகனத்தை நிறுத்தினார். அச்சமயத்தில், எதிர்பாராதவிதமாக, வேகமாக வந்த கார் ஒன்று அவருடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதனால், தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சீனிவாசனை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து இறந்தவர் யாரென்று தெரியாமலேயே செவிலியர் சிவகாமி, சீனிவாசன் மீதிருந்த ரத்தக்கறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். முகத்தைச் சுத்தம் செய்த பின்பே, இறந்தவர் தன் கணவர் என்பதை சிவகாமி அறிந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிவகாமி மருத்துவமனையில் தன் கணவரைக் கட்டியணைத்து அழுதார். அவரை யாராலும் தேற்ற முடியவில்லை. இந்த உருக்கமான சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு சோகத்தை வரவழைத்தது.

இந்த விபத்து தொடர்பாக ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x