Published : 20 Sep 2018 08:24 AM
Last Updated : 20 Sep 2018 08:24 AM

நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு: காற்றாலைகள் மூலம் இழப்பு ஈடுசெய்யப்படுகிறது

நிலக்கரி பற்றாக்குறையால், மேட்டூர் பழைய மற்றும் புதிய அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நெய்வேலி, மேட்டூர், வல்லூர் உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகளும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் உள்ளது. இவ்விரு மின் நிலையங்களிலும் மின் உற்பத்திக்கு தேவைப்படும் நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் இருந்து தருவிக்கப்படுகிறது. இந்நிலை யில், ஒடிசா மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்ததால் அங்கு நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனால், நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த வாரம் மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 3 நாட்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, நிலக்கரி வந்தவுடன் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. எனினும், போதிய அளவு நிலக்கரி கையிருப்பில் இல்லாததால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. மேலும், ஒடிசா மாநிலத்தில் இருந்து தொடர்ந்து நிலக்கரி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மேட்டூர் பழைய மின் நிலையத்தின் 2 அலகுகளில் பராமரிப்பு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று புதிய அனல் மின் நிலையத்திலும் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: பழைய மற்றும் புதிய அனல் மின் நிலையங்களுக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டன் வரை நிலக்கரி தேவைப்படும். எனவே, குறைந்தபட்சம் 2 லட்சம் டன் வரை நிலக்கரி கையிருப்பில் வைக்கப்படுவது வழக்கம். ஒடிசா மாநிலத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக அங்கிருந்து போதுமான அளவு நிலக்கரி கிடைக்கவில்லை.

தற்போது, மேட்டூரில் சுமார் 30 ஆயிரம் டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளது. எனவே, பற்றாக்குறையை ஈடுகட்ட புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட 2 அலகுகளும் மீண்டும் இயக்கப்படவில்லை.

இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், மேட்டூரில் உற்பத்தி நிறுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பை, காற்றாலை மின்சாரம் ஈடுசெய்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x