Published : 26 Sep 2018 01:47 PM
Last Updated : 26 Sep 2018 01:47 PM
விமர்சனம் செய்தால் நாக்கை அறுப்பேன் என்றால் நானும்தான் விமர்சனம் செய்துள்ளேன் என் நாக்கையும் அறுப்பீர்களா? என அமைச்சர் துரைக்கண்ணுவைப் பார்த்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
2009-ல் இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் எனக்கூறி, அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டார். அப்போது பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யாரை பார்த்து லஞ்ச ஆட்சி, குற்ற ஆட்சி என தவறாக பேசுகிறீர்கள்? தப்பா பேசினா உங்கள் நாக்கை அறுத்து விடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பேசியிருந்தார்.
இந்தப்பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
“மாண்புமிகு அமைச்சர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அமைச்சர் என்கிற இடத்திற்கு கொடுக்கக்கூடிய மாண்பை அவர்கள் காப்பாற்ற வேண்டும், வெட்டுவேன், குத்துவேன் நாக்கை அறுப்பேன் என்றால் நானும் விமர்சனம் செய்திருக்கிறேன். என்னுடைய நாக்கையும் அறுப்பார்களா? இப்படி யார் பேசினாலும் நாக்கையும் அறுப்பேன் என்றால் இதே போன்று எல்லோரும் பேசினால் என்ன ஆகும்?” என்று ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT