Last Updated : 12 Sep, 2018 02:24 PM

 

Published : 12 Sep 2018 02:24 PM
Last Updated : 12 Sep 2018 02:24 PM

காரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்: போலீஸாருக்கு பயந்து காருடன் விட்டுச்சென்ற கடத்தல்காரர்கள்

ரூபாய் 10 கோடி கேட்டு காரில் கடத்தப்பட்ட திருவாரூர் ரியல் எஸ்டேட் அதிபர் கும்பகோணம் அருகே மீட்கப்பட்டார். காரை பறிமுதல் செய்த போலீஸார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

திருவாரூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் நீதி மோகன் (65 ). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தன்னுடைய வீட்டின் முன்பகுதியில் அதற்கான அலுவலகம் வைத்துள்ளார். நீதி மோகனிடம் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ராஜேந்திரன்.

கடந்த 8-ம் தேதி அன்று நீதி மோகன் தன்னுடைய உதவியாளர் ராஜேந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திருவாரூர் பிடாரி கோயில் தெருவில் வந்த நீதி மோகன் வாகனத்தை கார் ஒன்று வழிமறித்து காரில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று நீதிமோகனை தாக்கி காரில் கடத்திச் சென்றனர். அப்போது தடுக்க வந்த ராஜேந்திரனை மர்ம நபர்கள் தாக்கி கீழே தள்ளி விட்டு தப்பி விட்டனர்.

இதுகுறித்து ராஜேந்திரன் போலீஸில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து திருவாரூரிலிருந்து நாகை, குடந்தை ஆகிய ஊர்களுக்கு செல்லும் வழியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நீதி மோகன் கடத்தப்பட்ட தகவல் அறிந்த அவருடைய குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். எதற்காக கடத்தப்பட்டார் என தெரியாமல் திகைத்தனர்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கும்பகோணம் அருகே சாக்கோட்டை என்ற இடத்தில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் போலீஸார் நிற்பதை பார்த்தவர்கள் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி விட்டனர். பின்னர் காரில் இருந்த நீதி மோகனை போலீஸார் பத்திரமாக மீட்டு திருவாரூர் அழைத்து வந்தனர் அவரிடம் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் ரூபாய் 10 கோடி கேட்டு நீதி மோகனை கடத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதனால் பணத்துக்காக யாரும் கடத்தினரா அல்லது வேறு ஏதும் காரணமா அல்லது வேறு காரணமா என போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். நீதி மோகன் தவணை முறையில் பிளாட் விற்பனை செய்து வந்துள்ளார்.

அந்த வகையில் நிலம் வழங்குவதாக கூறி ஏமாற்றியதாக இவர் மீது வழக்குகள் உள்ளன. அதனால் அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போலீஸார் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது. ஏமாற்றமடைந்த யாரேனும் நீதி மோகனை கடத்திச் சென்றனரா என்பது குறித்த விசாரணையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x