Published : 11 Sep 2018 12:35 PM
Last Updated : 11 Sep 2018 12:35 PM
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைக்கவே முடியாது என்ற உள்நோக்கத்தோடு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் உள்ள அனைவரும் விநாயகர் சிலையை நிறுவி விநாயகர் சதுர்த்தியை சமூக விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். இது ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களின் விழாவாக மாறி அப்பகுதி மக்கள் நடைபெறும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், சேவை நிகழ்ச்சிகள், பூஜை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என மக்கள் விழாவாகவே மாறி வருகிறது.
ஆனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழக முதல்வர் உடனே தலையிட்டு தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கி தெருவெங்கும் விநாயகர் மக்கள் விநாயகராக இடம்பெற்று அருள்தர வழிவகை செய்யவேண்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT