Published : 09 Sep 2014 10:32 AM
Last Updated : 09 Sep 2014 10:32 AM
நந்தனம் கல்லூரி மாணவரை ஒரு கும்பல் அண்ணா சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் அவரின் 3 விரல்கள் துண்டாகிவிட்டன. தலையிலும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.
சென்னை எர்ணாவூரை சேர்ந்தவர் சக்ரவர்த்தி(18). நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து பிராட்வே சென்ற 18கே மாநகரப் பேருந்தில் ஏறினார்.
அண்ணா சாலையில் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்தில் 7 பேர் கொண்ட ஒரு கும்பல் ஏறியது. அவர்கள் பேருந்தில் ஏறியதும், சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் நீளமான கத்தியை எடுத்து சக்ரவர்த்தியை வெட்டினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். அவர்களுடன் சக்ரவர்த்தியும் இறங்கி ஓடினார்.
ஆனால், அந்த கும்பல் சக்ரவர்த்தியை விடாமல் விரட்டிச் சென்று வெட்டியது. அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா அருகே உள்ள ஒரு கார் ஸ்டாண்டில் வைத்து சக்ரவர்த்தியை அந்த கும்பல் சுற்றி வளைத்து வெட்டியது. இதில் அவரது கையில் இருந்து 3 விரல்கள் துண்டாகிவிட்டன. தலையில் 2 இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. இரு கார்களுக்கு இடையே சக்ரவர்த்தி சிக்கிக் கொண்டதால் தப்பியோட முடியவில்லை.
சக்ரவர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு கார் டிரைவர்கள் மற்றும் வணிக வளாக காவலாளிகள் ஓடிவந்ததால் அவரை விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
தகவல் அறிந்து வந்த ஆயிரம்விளக்கு போலீஸார் சக்ரவர்த்தியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு விரல்களை இணைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சக்ரவர்த்தியை வெட்டியது கல்லூரி மாணவர்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக அவர் வெட்டப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT