Published : 04 Sep 2018 02:22 PM
Last Updated : 04 Sep 2018 02:22 PM

சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை நிலம் கையகப்படுத்துதல் சட்டப்பிரிவை நீக்கக் கோரும் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவைப் பயன்படுத்தி, சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடைகேட்டு சட்டப்பிரிவுக்கு தடை கோரி பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த மனுவில், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956-ன் படி நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியான 21 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆட்சேபணை தெரிவிக்கலாம் என்று இருக்கிறது.

மேலும், பொதுமக்களின் நிலத்தை கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, அறிவிப்பாணை அரசிதழில் வெளியான 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சாலை, ராணுவப் பயன்பாடு, அணு உலை உள்ளிட்ட 13 முக்கியத் தேவைகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என இச்சட்டத்தில் உள்ளது. இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையைத் தடுப்பதாக உள்ளதால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவு செல்லாது என அறிவிக்க வேண்டும். என்று கோரி இருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவால் மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மேலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லை என்று கூற முடியாது என தெரிவித்தனர்.

அந்தப் பிரிவை ரத்து செய்யக் கோருவதை ஏற்க முடியாது என்று உத்தரவிட்டனர். எனவே, வழக்கைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மனுவை மட்டும் தனியாக தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x