Published : 24 Sep 2018 04:23 PM
Last Updated : 24 Sep 2018 04:23 PM

கால் டாக்ஸி ஓட்டுநருடன் புதிய நட்பு: சுற்றுலா அழைத்து வந்து கணவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி

கொடைக்கானலில் கழுத்தறுப்பட்டு கிடந்த இளைஞரின் பிணத்தைப் பற்றிய துப்பு துலங்கியுள்ளது. தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரையே கொலை செய்த இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை அருகே கடந்த 18-ம் தேதி இளைஞர் ஒருவரின் பிணம் கிடந்தது. கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த ஆண் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததால் சுற்றுலா வந்த பயணியை வழிப்பறி செய்தவர்கள் கொலை செய்திருக்கலாம்? அல்லது அவருடன் வந்தவர்கள் கொலை செய்துவிட்டு ஓடியிருக்கலாம்? அல்லது வேறெங்காவது கொலை செய்துவிட்டு பிணத்தை இங்கு கொண்டுவந்து போட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸார் விசாரணையில் அவரது உடையிலிருந்த அடையாளம், மற்ற விபரங்களைச் சோதித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரிய வந்தது.

அம்மாநில போலீஸாரைத் தொடர்பு கொண்டபோது போலீஸாருக்குத் திடுக்கிடும் தகவல் வெளியானது. மங்களூரைச் சேர்ந்த முகமது ஷமீர் கடந்த 14-ம் தேதி மனைவி பர்தோஷ், 3 மாதக் குழந்தையுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்ததாகவும் பின்னர்  17-ம் தேதி ஷமீர் காணாமல் போனதாகவும் புகார் வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மனைவியுடன் சுற்றுலா வந்தவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அவரது மனைவி என்ன ஆனார் என இறங்கிய பெரியகுளம், தேவதானப்பட்டி போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

ஷமீரின் மனைவி பர்தோஷைத்  தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்களுக்குத் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. பர்தோஷ் தனக்குப் பழக்கமான ஆண் நண்பரான கால் டாக்ஸி ஓட்டுநருடன் சென்றுவிட்டதாகவும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கால் டாக்ஸி ஓட்டுநருடன் செல்லும்போது 60 சவரன் நகையையும் எடுத்துச் சென்றுள்ளதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் பர்தோஷ்  3 மாத கைக்குழந்தையை விட்டுச் சென்றுவிட்டார். தற்போது குழந்தை உறவினர்களின் பராமரிப்பில் உள்ளது.

முகம்மது ஷமீருக்கும் பர்தோஷுக்கும் திருமணமாகி அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தற்போது மூன்று மாதம் ஆகிறது. பர்தோஷ் வெளியே சென்றுவரும் நிலையில் கால் டாக்ஸியில் சென்றுள்ளார். அப்போது அவருக்கும் சவாரி வந்த ஆசிப் என்கிற கார் ஓட்டுநருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பு நாளடைவில் இறுக்கமாகி ஒருகட்டத்தில் கூடா நட்பாக மாறிப் போனது.

இந்நிலையில் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாத நிலையில் தங்கள் புதிய உறவுக்கு கணவரும், கைக்குழந்தையும் தடையாக இருப்பதாக இருவரும் கருதியுள்ளனர். இதையடுத்து கணவரைக் கொலை செய்துவிட்டு அதை விபத்தாகக் காண்பித்து தனது ஆண் நண்பருடன் சென்றுவிட பர்தோஷ் முடிவு செய்துள்ளார். இதற்காக ஆசீப்புடன் சேர்ந்து திட்டமிட்டு கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்வதுபோல் கடந்த 14-ம் தேதி கணவரை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் வந்துள்ளார்.

அவர்களுக்கு காரோட்டியாக ஆசீப் வந்துள்ளார். அவர் தனது மனைவியின் நண்பர் என்பது கணவர் முகமது ஷமீருக்குத் தெரியாது. மூன்று நாட்கள் சுற்றிய நிலையில் சரியான சந்தர்ப்பம் பார்த்து முகமது ஷமீரைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு அவரது உடலை டம்டம் பாறை அருகே தூக்கி வீசிவிட்டு கர்நாடகா திரும்பியுள்ளனர்.

மங்களூர் வந்த அவர்களிடம் உறவினர்கள் கணவர் முகமது ஷமீர் எங்கே என்று கேட்டவுடன் ஏதேதோ சொல்லி மழுப்பியுள்ளார் பர்தோஷ். ஒருகட்டத்தில் போலீஸில் உறவினர்கள் புகார் அளிக்கவே இனியும் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்று தனது ஆண் நண்பர் ஆசீப்புடன் வீட்டிலிருந்த 60 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானார்.

முகமது ஷமீர் உடல் கண்டெடுக்கப்பட்டு போலீஸார் தகவல் கூறிய பின்னர்தான் மனைவியால் அவர் கொலை செய்யப்பட்டது உறவினர்களுக்குத் தெரியவந்தது. கணவரைக் கொலை செய்து ஆண் நண்பருடன் தப்பிச்சென்றுள்ள பர்தோஷ் மற்றும் அவரது ஆண் நண்பர் அசீப் இருவரையும் தேவதானப்பட்டி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x