Published : 14 Sep 2018 12:17 PM
Last Updated : 14 Sep 2018 12:17 PM

பெட்ரோல் நிரப்பும்போது திடீரென தீப்பற்றி எரிந்த இளைஞர்: பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பின்னர் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பெட்ரோல் நிரப்ப வந்தவர் மீதும் தீப்பற்றியது.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த ஆல்வின் என்ற இளைஞர், இருசக்கர வாகனத்தின் டேங்கை நிரப்புமாறு கூறியுள்ளார். அப்போது டேங் நிரம்பி, பெட்ரோல் வெளியே வழிந்து ஆல்வினின் ஆடையும் நனைந்தது. இதையடுத்து, ஆடையில் பெட்ரோல் வழிந்ததையும் பொருட்படுத்தாமல், பெட்ரோல் நிரப்புவதை நிறுத்திவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார் ஆல்வின். அப்போது, இருசக்கர வாகனத்தில் தீ பரவியது. வாகனத்தில் பரவிய தீ, ஆல்வினின் மீதும் பற்றி எரியத் தொடங்கியது.

துரிதமாக செயல்பட்ட பங்க் ஊழியர்கள் தீ அணைப்பானைக் கொண்டு ஆல்வின் உடையின் மீது பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், 40 சதவீத தீக்காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆல்வின் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இக்காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x