Published : 02 Sep 2014 08:36 AM
Last Updated : 02 Sep 2014 08:36 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கடந்த ஜூன் 28-ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக கட்டுமான உரிமையாளர் மனோகரன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு பெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ரெகுபதி கமிஷன் தனது அறிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்பேரில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜாராமன் ஆகியோர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளில் விதிகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x