Published : 18 Sep 2018 09:59 AM
Last Updated : 18 Sep 2018 09:59 AM
சென்னையில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவரை நேற்று முன்தினம் மாலை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கருத்துவேறுபாடு
அதிமுகவில் ஓபிஎஸ் - பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இணைந்து செயல்படுவதாகவும் அறிவிக்கின்றனர்.
ஆனால், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக இரு தரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும் கருத்துவேறுபாடுகள் தொடர்கிறது. மூத்த நிர்வாகிகள் பலரும் இதை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுக் கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் அளித்த பாஜக, தற்போது அவரை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக வட்டாரத்திலும்..
இந்நிலையில், பிரதமர் மோடியின் தம்பியை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் நடந்துள்ள இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்திலும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT