Published : 05 Sep 2018 09:47 PM
Last Updated : 05 Sep 2018 09:47 PM

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைப்பதற்கான அரசாணை: எதிர்த்த பொது நல வழக்குகள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை கரைக்கும் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்றொரு வழக்கில் ராமகோபாலன் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் , அவற்றை கரைப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. விநாயகர் சிலைகள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதியை பெற வேண்டும்.

சிலைகளை கரைக்க மாட்டு வண்டிகளில் வரக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இதுபோன்ற அனைத்து அனுமதியையும் பெறுவது சாத்தியம் இல்லாததால் அரசாணையை ரத்து செய்ய கோரி வசந்தகுமார், சுடலையாண்டி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததது.

அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசாணையை எதிர்த்த வசந்தகுமார் மற்றும் சுடலையாண்டி ஆகியோரின் பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனிடையே அரசாணையை எதிர்த்தும், சிலைகள் வைப்பதற்கான கடுமையான விதிகளை மாற்றி அமைக்க கோரியும், ஒற்றை சாளர முறை கோரியும் தனி நீதிபதி முன்பாக தொடரப்பட்ட இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், பரமேஸ்வரன் உள்ளிட்டோரின் வழக்குகள் இன்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது.

இரு நீதிபதிகள் பிறப்பித்த தள்ளுபடி உத்தரவு தொடர்பாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்ட நீதிபதி, அவற்றின் உத்தரவுகளை முழுமையாக பார்த்துவிட்டு இந்த வழக்குகளில் உத்தரவிடுவதாக தெரிவித்து வழக்கை நாளை ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x