Published : 19 Sep 2018 03:34 PM
Last Updated : 19 Sep 2018 03:34 PM

ஹெல்மெட், சீட் பெல்ட் சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தவில்லை; உயர் நீதிமன்றம் அதிருப்தி; நாளை முக்கிய உத்தரவு

கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என  விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை, ஆகவே அதை முழுமையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை கொரட்டூரைச்சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் நிலுவையில் இருந்தது.  இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, கடந்த 2015-ம் ஆண்டு கட்டாய ஹெல்மெட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த மூன்றாண்டுகளாக எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், பல்வேறு விளம்பர யுக்திகள் குறித்தும் அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல 2015-ல் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்குப் பிறகு எத்தனை வழக்குகள் பதிவானது என்பது தொடர்பான ஆண்டு வாரியான மற்றும் மாவட்ட வாரியான அறிக்கையும் நீதிமன்றத்தின் பார்வைக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைப் படித்த நீதிபதிகள், இந்த நடவடிக்கை விதிகளை மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை. பெரும்பான்மையான நபர்கள் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது.

இந்த விவகாரத்தில் கட்டாய ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதில் அரசின் தன்மை நடைமுறையில் திருப்தி இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பள்ளி கல்லூரிகளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதாது, ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது மோட்டார் வாகன விதிகளிலேயே உள்ள சட்ட விதிகளை அமல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டினர்.

பணியில் உள்ள காவல்துறையினர் உள்ளிட்ட பலர் சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்கின்றனர். இவர்கள் தேசியக் கொடியுடன் செல்லும் நீதிபதிகளின் வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் மதிப்பதில்லை, கட்டாய ஹெல்மட் சட்டத்தில் தமிழக அரசின் விதிமுறைகளில் திருப்தி இல்லை, விதிகளை அமல்படுத்துங்கள் என்று சொன்னால் நீதிமன்றம் கட்டாயப்படுத்துவதாக நீதிமன்றத்தின் மீதும், நீதிபதிகள் மீதும் திசை திருப்புகின்றனர் என அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, கட்டாய ஹெல்மெட் குறித்த ராஜேந்திரன் வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x