Published : 18 Sep 2018 09:40 AM
Last Updated : 18 Sep 2018 09:40 AM

140-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: பெரியார் படத்துக்கு ஓபிஎஸ், ஸ்டாலின், பல்வேறு தலைவர்கள் மரியாதை

பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட் டது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், பொதுச்செயலாளர் க.அன்பழ கன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வேப்பேரி பெரியார் திடலில் உள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்துக்கு காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார் படத்துக்கு அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எழும்பூரில் மதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டம் அரசியல் பயிலரங்கில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் ம.திலகபாமா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் ந.சேதுராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x