Published : 10 Sep 2014 11:03 AM
Last Updated : 10 Sep 2014 11:03 AM

பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்ததாக இளைஞர் எரித்துக் கொலை: ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த இளைஞரை எரித்துக் கொன்ற 5 பேரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (20). இவர் திங்கள்கிழமை காலை கிராமத்துக்கு வெளியே, உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அருகில் அவர் ஓட்டி வந்த பைக்கும் கிடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.

முன்னதாக அவர் சென்னை மாநகர குற்றவியல் நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலம்:

பக்கத்து வீட்டில் வசிக்கும் கன்னியப்பனின் மகள்கள் குளிக்கும்போது நான் எட்டிப்பார்த்ததாக கூறி, கன்னியப்பன் சண்டையிட்டு வந்தார். இந்நிலையில் கன்னியப்பன், முருகன், சங்கர், குமார், மற்றொரு முருகன் ஆகியோருடன் வந்து, நான் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது மடக்கி, உடலில் பெட்டோலை ஊற்றி எரித்துவிட்டு தப்பினர். இவ்வாறு கூறியுள்ளார்.

இவர் இறந்ததையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கன்னியப்பன் உள்ளிட்ட 5 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில் கன்னியப்ப கூறியதாவது: சுதாகரின் பக்கத்து வீட்டில் நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மகள்கள் குளிக்கும் போதும், வீட்டில் இருக்கும் போதும் மாடியில் நின்று சுதாகர் செல்போனில் படம் பிடித்தார். இதனை நாங்கள் கண்டித்தும் அவர் செல்போனில் படம் பிடிப்பதை நிறுத்தவில்லை. இது தொடர்பாக எங்களுக்குள் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான், சுகாதர் மோட்டார் சைக்கிளில் வெளியில் செல்வது தெரிந்து, அவரை மடக்கி பெட்ரோல் ஊற்றி எரித்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x