Published : 12 Sep 2018 08:23 PM
Last Updated : 12 Sep 2018 08:23 PM
வியாசர்பாடி, எம்.கே.பி. நகரில் டாஸ்மாக் கடையில் தகராறு என்பதற்காக மோதலை தடுக்கச் சென்ற உதவி ஆய்வாளரை தாக்கி வாக்கி டாக்கியை உடைத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் நேற்றிரவு டாஸ்மாக் மதுபானக்கடையில் மது அருந்தியவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து 100-க்கு சிலர் போன் செய்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு அமைதியை ஏற்படுத்த எம்.கே.பி.நகர் எஸ்.ஐ. ஞானதாஸ் அங்கு விரைந்துச் சென்றார். அங்கு சென்ற அவர் டாஸ்மாக் கடைக்கு அருகில் நின்று தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டினார். இதையடுத்து, கடைக்கு உள்ளே இருப்பவர்களை வெளியேற்றினார்.
அப்போது மது போதையோடு கடைக்குள்ளிருந்து வெளியே வந்த இளைஞர் ஒருவர் எஸ்.ஐ ஞானதாஸிடம் வம்பிழுத்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க பாய்ந்தார். உடனிருந்தவர்கள் அதை தடுத்தனர். ஆனாலும் திமிறியபடி வந்த அவர் எஸ்.ஐ ஞானதாஸை தாக்கினார். அவர் கையிலிருந்த வாக்கி டாக்கியை பறித்து வீசினார்.
இதையடுத்து அவரை மடக்கி பிடித்த எஸ்.ஐ மற்ற காவலர்கள் உதவியுடன் அவரை கைது செய்தார். பணியிலிருந்த காவலரைத் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் அவர் பெயர் ஜெகதீஷ்(22) என்பதும், வியாசர்பாடி கென்னடி நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT