Published : 17 Sep 2014 12:17 PM
Last Updated : 17 Sep 2014 12:17 PM

அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: எல்ஐசி, இந்தியன் ஆயில் அறிவிப்பு

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக எல்ஐசி, இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தனது பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தற்போது ஐடிஐ, பாலி டெக்னிக் தொழில்கல்வி படிப்புகள் மற்றும் கலை அறிவியல் பட்டம், பொறியியல், மருத்துவ பட்டப் படிப்புகள் படிக்கும் ஏழை மாணவர் களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவர்கள் www.b4s.in/plus/LGJ229 என்ற இணையதளத்தில் செப்டம்பர் 23-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று எல்ஐசி அறிவித்துள்ளது.

இந்தியன் ஆயில்

இதேபோல், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தற்போது பிளஸ்-1 அல்லது ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல் (எம்பிஏ) உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாயும் வழங்க இருக்கிறது.

இதற்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவரின் வயது 15 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் >www.b4s.in/plus/IES972 என்ற இணையதளத்தில் இந்த மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழ் மற்றும் ஆவணங்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x