Published : 25 Sep 2018 05:51 PM
Last Updated : 25 Sep 2018 05:51 PM

மது போதையில் தகாத வார்த்தைகளில் திட்டிய தந்தை; தலையில் கல்லைப் போட்டு கொலை: மனநலம் பாதிக்கப்பட்ட மகள் கைது

காரைக்குடியில் மது போதையில் தகாத வார்த்தைகளில் திட்டிய தந்தையை, மனநலம் பாதிக்கப்பட்ட மகள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கணேசபுரம் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் பிச்சை (63). இவர் காரைக்குடி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால், இவரது மூத்த மகள் கற்பகவள்ளி (40). மனநிலை பாதிப்பால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கணவனைப் பிரிந்து பெற்றோரோடு வசித்து வருகிறார். அதற்கான சிகிச்சையும் பெற்றும் வருகிறார்.

இந்நிலையில், திங்கள்கிழமை குடித்துவிட்டு வந்த தந்தை பிச்சை, மனைவி மீனாட்சி, மகள் கற்பகவள்ளியை தகாத வர்த்தைகளில் திட்டித் தகராறு செய்துள்ளார். இதில் அவரது மனைவி மீனாட்சி உள்ளூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை பிச்சை மீது மகள் கற்பகவள்ளி வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பிச்சை உயிரிழந்தார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி தெற்கு போலீஸார் கற்பகவள்ளியைக் கைது செய்தனர்.

பிச்சையின் சடலத்தை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x