Published : 10 Sep 2018 08:29 AM
Last Updated : 10 Sep 2018 08:29 AM

கல்லிடைக்குறிச்சி கோயிலில் 1982-ல் கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலை ரூ.30 கோடிக்கு ஆஸ்திரேலியாவுக்கு விற்பனை: உயர் நீதிமன்ற புலன் விசாரணைக்குழு கண்டுபிடிப்பு

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோயிலில் 1982-ம் ஆண்டு கொள்ளை அடிக்கப்பட்ட நடராஜர் சிலை ரூ.30 கோடிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சிய கத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உயர் நீதிமன்ற புலன் விசாரணைக் குழு இதனை கண்டுபிடித்துள்ளது.

கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த 600 ஆண்டுகள் தொன்மையான ஐம்பொன்னால் செய்யப்பட்ட இரண்டரை அடி உயர நடராஜர் சிலை, 2 அடி உயர சிவகாமி அம்மன் சிலை, ஒன்றரை அடி உயர மாணிக்கவாசகர் சிலை, ஒரு அடி உயர பலி நாயகர் சிலை ஆகியவை கடந்த 5.7.1982-ல் கொள்ளையடிக்கப்பட்டன. நடராஜர் சந்நதி இரும்புக் கதவின் பூட்டுகளை உடைத்து 4 சிலைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

வழக்கு முடிக்கப்பட்டது

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 1984-ம் ஆண்டு இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடித்து வைக்கப்பட்டது.

36 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத இந்த வழக்கில், ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான உயர் நீதிமன்ற புலன் விசாரணைக் குழு தற்போது துப்பு துலக்கி யுள்ளது. திருட்டுபோன நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வும், கடத்தல்காரர்கள் இச்சிலையை ரூ.30 கோடிக்கு விற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஐஜி பொன்.மாணிக்கவேல் உத்தரவு

இதையடுத்து, இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஐஜி பொன்.மாணிக்கவேல் மின்னஞ்சலில் உத்தரவு வழங்கியுள்ளார். அவர் விரும்பாத பட்சத்தில் அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை உயர் நீதிமன்ற புலன் விசாரணைக் குழுவுக்கு மாற்றவும் எஸ்பிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டாக ரகசிய விசாரணை நடத்தி சிலையை கண்டுபிடிக்க திறம்பட செயல்பட்ட அதிகாரிகள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோருக்கு ஐஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

போலி சிலைகள்

மேலும், கல்லிடைக்குறிச்சி கோயிலுக்குச் சொந்தமான 15 ஐம்பொன் சிலைகளில் எவையெல்லாம் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்டு கல்லிடைக்குறிச்சி கோயிலில் நிறுவவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் மேலும் 8 சிலைகள்

நடராஜர் சிலையையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் இருந்து 8 சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ள நிலையில் திருடுபோன 2 அடி உயரம் உள்ள சிவகாமி அம்மன் சிலை மட்டும் ஏற்கெனவே கடந்த 1995-ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டு, மீண்டும் கோயிலில் ஒப்படைக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் அச்சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் அறநிலையத் துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், உண்மையிலேயே திருட்டுபோன சிவகாமி அம்மன் சிலை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும், தற்போது அங்கிருப்பது போலி சிலை எனவும் தெரியவந்துள்ளதாக புலன் விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டாக ரகசிய விசாரணை நடத்தி சிலையை கண்டுபிடிக்க திறம்பட செயல்பட்ட அதிகாரிகள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோருக்கு ஐஜி பொன்.மாணிக்கவேல் பாராட்டு தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x