Published : 06 Sep 2018 03:23 PM
Last Updated : 06 Sep 2018 03:23 PM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்க: ரா.முத்தரசன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ரா.முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவர்களை விடுதலை செய்ய கடும் முயற்சிகளை மேற்கொண்டார். மத்திய அரசு அதற்கு எதிராக செயல்பட்டது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் அவர்களை விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பை பயன்படுத்தி உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பலமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x