Published : 19 Sep 2018 09:08 AM
Last Updated : 19 Sep 2018 09:08 AM

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கம்: லண்டனில் பேருந்து பணிமனைகளை பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்; பேருந்து இயக்கம், நிர்வாகம் குறித்து விரிவாக ஆலோசனை

சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்குவது தொடர்பாக லண்டனில் மின்சார பேருந்து இயக்கம், பராமரிப்பு உள்ளிட்டவற்றை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் மற்றும் செயலர் டேவிதார் ஆகியோர் பார்வையிட்டு தொழில் நுட்பங்களை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதைக் குறைக்கவும் தமிழக அரசு முயற்சித்து வருகிறது. வெளிநாடுகளில் முன்னேறிய மாநகரங்களை உறுப்பினர்களாகக் கொண்டு லண்டனில் இயங்கி வரும் சி-40 என்ற முகமையின் வழிகாட்டுதல்படி, சென்னையில் மின்சாரம், மின்கலன் பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மார்ச் மாதம் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் சி-40 முகமை இடையே, முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சாலை வரைபடம் தயாரித்தல்

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்தல், புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்துதல், குறைந்த விலையில் மின்சார பேருந்துகளை வாங்குதல், இவ்வகை பேருந்துகளை இயக்க சாலை வரைபடம் தயாரித்தல், தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், தூய்மையான மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சி-40 முகமை தமிழக போக்குவரத்துத் துறைக்கு உதவி செய்யும்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், சி-40 முகமையின் பிரதி நிதிகள் ஜேம்ஸ் அலெக்சாண்டர், ஜீர்கன் பாமான் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னையில் முகாமிட்டிருந்தனர். போக்குவரத்து, நிதி, எரிசக்தித் துறையின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசித்தனர்.

அமைச்சருக்கு அழைப்பு

போக்குவரத்துத் துறைச் செயலர் பி.டபிள்யூ.சி டேவிதாருடன், திட்டத்தை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக விவாதித்தனர். மேலும், மாநகர போக்குவரத்துக் கழக அடையாறு பணிமனையை நேரில் ஆய்வு செய்தனர். போக்குவரத்துக் கழகங்களின் தற்போதைய செயல்பாடுகளையும் அறிந்து கொண்டது டன், அமெரிக்கா மற்றும் லண்டனில் நடக்கும் கருத்தரங்கில் பங்கு பெற வருமாறு போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் செயலர் டேவிதார் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த அழைப்பை ஏற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதாரும் லண்டன் சென்றனர். அங்கு, மின்சாரத்தால் இயங்கும் பேருந்து, பணிமனை ஆகியவற்றை செப்.17-ம் தேதி பார்வையிட்டனர்.

லண்டன் போக்குவரத்து அமைப்பின் தலைவர் டாம் குன்னிங்டனை சந்தித்து, பேருந்து இயக்கம், நிர்வாகம், செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்கள் குறித்தும் விரிவாக ஆலோசித்தனர்.

மின்சாரப் பேருந்து பணிமனைகள் அமைப்பதில் பெரும் பங்காற்றி வரும் லண்டன் போக்குவரத்து அமைப்பின் ஆலோசகர் மைக் வெஸ்டனையும் சந்தித்து பேசினர்.

அதன்பின் லண்டன், வாட்டர் லூவில் செயல்படும் மின்சார பேருந்து பணிமனையை பார்வையிட்டு, பேருந்துகள் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப செயல்பாடுகளைக் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியின்போது சி-40 முகமையைச் சேர்ந்த அனிலிசி ரோசா, அன்னா பெய்ரிஸ், சிமோன், குஞ்சன் மற்றும் வாட்டர்லூ பணிமனையின் தொழில்நுட்ப இயக்குநர் ரிச்சர்டு ஹாரிங்டன் ஆகியோர் உடன் இருந்தனர். அதன்பின் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் போக்குவரத்து தொடர்பாக பிரேம் பார்த்த சாரதி மற்றும் பென்டாக் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x