Published : 14 Sep 2018 12:55 PM
Last Updated : 14 Sep 2018 12:55 PM
திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி திமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானார். இதையடுத்து, திமுகவில் முக்கிய பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவராகவும், முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன் கட்சியின் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும், கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனால், வெகுகாலமாக துரைமுருகன் வகித்து வந்த முதன்மைச் செயலாளர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், முதன்மைச் செயலாளர் பொறுப்பு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கழக சட்டதிட்ட விதி: 17 - பிரிவு: 3-ன் படி திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார்.
நாளை (சனிக்கிழமை) விழுப்புரத்தில் அண்ணா - பெரியார் பிறந்த நாள் விழா, திமுக தொடங்கப்பட்ட தினம் என முப்பெரும் விழாவை திமுக நடத்தவுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT