

வருமான வரி வழக்கின் விசாரணைக்காக முதல்வர் ஜெயலலிதா அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால், நிலுவையில் உள்ள சமரச மனுவை 6 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 31.3.1993-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் அக்டோபர் 1-ம் தேதி அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் இம்மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை இன்று (புதன்கிழமை) வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, புதன்கிழமை மனுவை விசாரித்த நீதிபதி கே.பி.கே.வாசுகி, வருமான வரி வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராகத் தேவையில்லை என தீர்ப்பளித்தார்.