Published : 10 Sep 2018 09:57 PM
Last Updated : 10 Sep 2018 09:57 PM

கணவரை விட்டுப் பிரித்து அழைத்து வந்து 7 ஆண்டுகள் குடித்தனம்; பல லட்சம் பணம், நகை பணம் மோசடி: புளியந்தோப்பு எஸ்.ஐ.மீது திமுக பெண் பிரமுகர் புகார்

தன் மீது விருப்பம் உள்ளது போல் ஏமாற்றி தனது கணவரை விட்டு பிரித்து 7 ஆண்டுகள் குடித்தனம் நடத்திவிட்டு மோசடியில் ஈடுபட்ட புளியந்தோப்பு எஸ்.ஐ.மீது திமுக பெண் பிரமுகர் புகார் அளித்துள்ளதை அடுத்து எஸ்.ஐ.மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (44). புளியந்தோப்பு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2011-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றியுள்ளார்.

அப்போது எம்.எல்.ஏ சீட்டு கேட்டு அறிவாலயத்துக்கு வந்த ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் பாளையத்தை, திமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த செந்தாமரை (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமில்லை, மனைவி சரியில்லை என்று கூறி செந்தாமரையின் இரக்கத்தை சம்பாதித்துள்ளார்.

நாளடைவில் பழக்கம் நெருக்கமாகி செந்தாமரையின் கணவருக்கும், செந்தாமரைக்கும் உள்ள குடும்பச்சண்டையை பயன்படுத்தி அவரைவிட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வைத்துள்ளார். பின்னர் செந்தாமரைக்கு தாலி கட்டி அவரை மனைவியாக்கியுள்ளார். ஈரோட்டுக்கு அடிக்கடி சென்றுவரத்துவங்க ஊரில் பிரச்சினை ஆனதால் செந்தாமரையையும் அவரது மகன் மற்றும் மகளையும் சென்னை அழைத்து வந்து பள்ளிக்கரணையில் தங்க வைத்துள்ளார்.

இப்படியே பல ஆண்டுகள் ஓடியுள்ளது. டைவர்ஸ் லேட்டானதால் இருவரும் முறைப்படி திருமணம் செய்துக்கொள்ளவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக 40 சவரன் வரையில் நகைகளும், 10 லட்சத்துக்கு மேல் பணத்தையும் பெற்று ஏமாற்றியுள்ளார். சமீபத்தில் அவரது செல்போனுக்கு பல பெண்களிடமிருந்து அழைப்புகள் வந்ததைப் பார்த்து செந்தாமரை சந்தேகப்பட்டு கேட்டபோது கோபத்தில் மிரட்டிவிட்டு கடந்த ஜூன் 5-ம் தேதி வீட்டிலிருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் மற்றும் 6 சவரன் தங்க நகைகளுடன் மாயமாகியுள்ளார்.

அவரது செல்போனுக்கு போன் செய்தபோது அவரது முன்னாள் மனைவி என்று கூறப்பட்ட கலா எடுத்து பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தாமரை இதுகுறித்து புகார் அளிக்க முயன்றபோது கடந்த ஜூன் 17-ம் தேதி கலாவை அழைத்து மிரட்டியுள்ளார். கொலை செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதன்பின்னர் செந்தாமரை மேற்கண்ட தகவல்களை புகாராக கூறி கடந்த 8-ம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப்பெற்ற போலீஸார் தலைமறைவாக இருக்கும் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் மீது ஐபிசி பிரிவு 417, 406, 380, 506910 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாவலராக இருக்க வேண்டிய காவல்துறை எஸ்.ஐ ஒருவரே இன்னொருவர் மனைவியுடன் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்ததும் அவரை ஏமாற்றி பல லட்சம் பணம் நகை மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளதும் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x