Last Updated : 14 Sep, 2018 02:56 PM

 

Published : 14 Sep 2018 02:56 PM
Last Updated : 14 Sep 2018 02:56 PM

திருக்கோவிலூர் அருகே தாய், 3 மகன்கள் தீயில் கருகி உயிரிழப்பு: வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை

திருக்கோவிலூர் அருகே தாய் மற்றும் 3 மகன்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், அப்பெண் வரதட்சணைக் கொடுமையால் தன் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி தனலஷ்மி (30). இத்தம்பதியருக்கு கமலேஷ்வரன்(7), விஷ்ணுபிரியன்(5), ருத்ரன்(1) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை 5.30 மணியளவில் இளங்கோவனின் தகப்பனார் டீ வாங்கி விட்டு வீடு திரும்பினார். அப்போது தனது மருமகள் மற்றும் குழந்தைகள் தங்கி இருந்த கூரை வீடு தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுக்க அனைவரும் வந்து தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் தீ வீடு முழுவதும் பரவியதால் 3 குழந்தைகள் உட்பட தனலஷ்மியும் தீயில் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், விசாரணையில் தனலஷ்மியின் கணவர் இளங்கோவன், மாமனார் ராமசாமி, மாமியார் வேங்கையம்மாள் ஆகிய 3 பேரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் தன் 3 குழந்தைகளுடன் தனலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, போலீஸார் இளங்கோவன், ராமசாமி, வேங்கையம்மாள் ஆகிய மூவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x