Published : 10 Sep 2018 11:49 AM
Last Updated : 10 Sep 2018 11:49 AM

அரசு அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் நடத்திய அதிமுக எம்.பி.: நீலகிரியில் சர்ச்சை

அரசு தோட்டக்கலைத் துறை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனன், அதிமுக கட்சிக் கூட்டத்தை நடத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் மக்களுக்கு எந்தவிதப் பணிகளையும் செய்யவில்லை எனவும், அவர் தங்கள் தொகுதிப் பக்கம் வருவதில்லை எனவும் கூடலூர், பந்தலூர் பகுதி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.பி. கோபாலகிருஷ்ணன் மேடையிலேயே கட்சியினரை ஒருமையில் வசை பாடினார். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

இது அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் மற்றொரு எம்.பி.யான நீலகிரி மாவட்டச் செயலாளர் கே.ஆர்.அர்ஜூனன். இவர் கட்சி தொடர்பான கூட்டத்தை அரசு அலுவலகத்தில் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமாக உதகை சேரிங்கிராஸில் உள்ள தோட்டக்கலை வளாகத்தில் கட்சியில் இணையும் நிகழ்ச்சியை அதிமுகவினர் நடத்தினர். கட்சி நிகழ்ச்சி என்பதால் அரசு அலுவலகம் என்று கூட இல்லாமல், தொண்டர்கள் விசில் அடித்துக் கூச்சலிட்டனர். இதனால், அரசு அலுவலகம் பொதுவெளியில் நடத்தப்படும் கட்சிக் கூட்டம் போல் காட்சியளித்தது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜிடம் கேட்ட போது, “எம்.பி. கே.ஆர்.அர்ஜூனன் தோட்டக்கலை வாரிய உறுப்பினராக உள்ளார். விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்த இடம் தேவை எனக் கேட்டதால் வாய்மொழியாக தோட்டக்கலைத் துறை வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூறினேன். கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது தெரியாது. அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x