Published : 11 Sep 2018 01:11 PM
Last Updated : 11 Sep 2018 01:11 PM

புதுச்சேரி சாலைகளுக்கு கருணாநிதி பெயர் சூட்ட முடிவு: நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் கடிதம்

 புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் கருணாநிதியின் பெயரைச் சூட்ட புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை வெளியிட்டார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில், “தனது பொது வாழ்வில் புதுச்சேரி மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும், தற்போது யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு, முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து பாடுபட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்குப் பெருமை சேர்த்து, அவருடைய நினைவைப் போற்றிடும் வகையில், புதுச்சேரியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகளுக்கு, கருணாநிதியின் பெயரை வைப்பது என்று முடிவு எடுத்துள்ளதற்கு தங்களுக்கும் தங்கள் அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை - ராஜீவ் காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட சாலைக்கும், காரைக்கால் - திருநள்ளாறு புறவழிச் சாலைக்கும் - பட்டமேற்படிப்பு மையத்திற்கும் ‘டாக்டர் கலைஞர்’ என பெயர் சூட்டப்படும் என்று அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதற்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும், திமுக சார்பில், பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், பெரிதும் சிறப்பு வாய்ந்ததும் என்றென்றும் நிலைத்து நிற்கப் போவதுமான, இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் திமுக என்றைக்கும் உணர்வுப்பூர்வமாகத் துணை நிற்கும் என்றும், கருணாநிதியின் வழியில் அயராது புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக திமுக குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில், மறக்கவியலாத இடத்தை புதுச்சேரி பெற்றிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுவது எனது கடமை எனக் கருதுகிறேன்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x