Published : 27 Jun 2019 02:55 PM
Last Updated : 27 Jun 2019 02:55 PM

ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் ஜெயித்துவிட்டார்கள் என்றுதானே அர்த்தம் - டிடிவி தினகரனை சீண்டிய தங்க தமிழ்ச்செல்வன்

தேர்தல் வியூகத்தில் டிடிவி தினகரனைவிட, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாகச் செயல்பட்டதாக அமமுக அதிருப்தி நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

மக்களவைத் தேர்தல் தோல்வி, சட்டப்பேரவை இடைத் தேர்தல் தோல்வி ஆகியவற்றால் தங்க தமிழ்ச்செல்வன், அமமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதுகுறித்தும் தினகரன் பற்றியும் அமமுக நிர்வாகி ஒருவரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலானது.

 

இதற்கிடையே தங்க தமிழ்ச்செல்வனும் டிடிவி தினகரனும் தனித்தனியாக ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்துக்கொண்டனர். தங்க தமிழ்ச்செல்வனைக் கட்சியில் இருந்து நீக்கப்போவதாகவும் தினகரன் அறிவித்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம் தங்க தமிழ்ச் செல்வன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''தேர்தல் வியூகத்தில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் ஜெயித்துவிட்டனர், மக்கள் முடிவுகளைக் கொடுத்துவிட்டார்களே! அதிமுக தொண்டர்களை வழிநடத்துவதில் அவர்கள் இருவருக்கும் ஆதரவு உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

 

அதிமுக அரசுக்குக் கடந்த இரு வருடங்களாக பல இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டன. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என கடுமையாக எதிர்க்கப்பட்டது, எல்லாக் கட்சிகளும் சேர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். எத்தனையோ வித்தைகள் போட்டுப் பார்த்தோம்.

 

ஆனால் எதுவுமே நடக்கவில்லை. எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் முடிகிறதே? எனில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் ஜெயித்துவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்!'' என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x