Published : 06 Jun 2019 03:09 PM
Last Updated : 06 Jun 2019 03:09 PM

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகளைத் திறந்து வைக்க அனுமதி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகளைத் திறந்து வைக்க அனுமதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

மத்திய அரசின் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா, கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து திரையரங்குகள், ஹோட்டல்கள், வங்கிகள் மற்றும் தொழில் வர்த்த்க நிறுவனங்கள் வாரத்திற்கு 7 நாட்களிலும், 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை மாநிலங்கள், மசோதாவில் உள்ளபடியோ, அந்தந்த மாநிலங்களின் நடைமுறைத் தேவைகளின்படி மாற்றம் செய்துகொண்டோ பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும், பணியிலிருக்கும் ஊழியர்கள் பற்றிய தகவல்கள் அனைவரது பார்வையிலும் படும் இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும், கூடுதல் நேரம் வேலை பார்த்தால், கூடுதல் தொகை வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் நேரமாக ஒரு நாளைக்கு 10.30 மணிநேரமோ அல்லது வாரத்துக்கு 57 மணிநேரத்துக்கு மேலோ பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாகவோ, விடுமுறையிலோ பணியில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும் தொடர்புடைய மேலாளர் அல்லது நிறுவனத்துக்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது என்றும், அவசியம் இருந்தால் பெண்களின் எழுத்துப்பூர்வ சம்மதத்துடனே பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருக்கும் பெண்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x