Last Updated : 20 Jun, 2019 12:50 PM

 

Published : 20 Jun 2019 12:50 PM
Last Updated : 20 Jun 2019 12:50 PM

சேலம் அருகே பொதுமக்கள் உதவியுடன் தெப்பக்குளத்தை தூர்வார கோரிக்கை

சேலம் அருகே தெப்பக்குளத்தை பொதுமக்கள் உதவியுடன் தூர்வார கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் அம்மாபேட்டை, காமராஜர் நகர் காலனியில் அம்மாபேட்டை தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்துக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தை கடந்த வாரம் அப்பகுதியைச் சேர்ந்த , 'அகழிகள் அமைப்பு' குழுவினர் தூர்வாரி மழை நீர் தேங்கும் வகையில் பராமரிப்புப் பணி மேற்கொண்டனர்.

இதற்கு நெசவாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து தெப்பக்குளத்தில் பொதுமக்கள் மற்றும் அகழிகள் அமைப்பினர் அத்துமீறி நுழையக் கூடாது என்று தடை விதித்தது. இதனை அடுத்து தெப்பக்குளத்தை தூர்வாரும் பணியை பொதுமக்கள் கைவிட்டனர். இந்நிலையில், நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அகழிகள் அமைப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான தெப்பக்குளத்தை பொதுமக்கள் மற்றும் அகழிகள் அமைப்பினர் ஆக்கிரமிப்பு செய்து தூர்வாருதல் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

இதுகுறித்து சேலம் 'கன்ஸ்யூமர் வாய்ஸ்' தலைவர் பூபதி கூறியதாவது:

''அம்மாபேட்டையில் உள்ள காமராஜர் காலனியில் நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தெப்பக்குளம் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி இருந்தது. தற்போது, தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் உதவியுடன், நிதி திரட்டி தெப்பக்குளத்தை தூர்வாரி உள்ளோம்.

இதனால், தெப்பக்குளத்தில் இரண்டடி உயரம் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சங்கத்தினர் தெப்பக்குளத்தை பொதுமக்கள் உதவியுடன் தூர்வார அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம். மேலும், சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்ப உள்ளோம்''.

இவ்வாறு பூபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x