530 பதவிகளுக்கு 1,486 பேர் போட்டி: இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல்

530 பதவிகளுக்கு 1,486 பேர் போட்டி: இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல்
Updated on
2 min read

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 530 இடங் களுக்குஇன்று இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் நன்னடத்தை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சி மேயர்கள், 7 நகராட்சி தலைவர்கள் உள்பட தமிழகம் முழுவதும் நகர மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக இருந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு செப்டம்பர் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் நெல்லை மேயர், 4 நகராட்சித் தலைவர்கள் சுமார் 1,500 பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீதமுள்ள 530 இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தப் பதவிகளுக்கு 1,486 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சி பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமும், ஊராட்சி பகுதி களில் வாக்குச்சீட்டும் பயன்படுத்தப் படுகிறது. இந்தத் தேர்தலில் ‘நோட்டா’ வசதி கிடையாது. ‘71இ’ என்ற விதிப்படி வாக் களிக்க விரும்பாதவர்கள் வாக்குச் சாவடியில் வைக்கப்பட்டுள்ள குறிப் பேட்டில் எழுதிவிட்டுப் போகலாம்.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 300-க்கும் அதிகமான பகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடக்கிறது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதிகளில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலின்போது நடத்தை விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக வழங் கப்பட்ட தீர்ப்புகளில் தெரிவிக்கப் பட்ட நெறிமுறைகள், வழிகாட்டு தல்களை தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

தேர்தலின்போதும், வாக்கு எண்ணிக்கை நாளன்றும் உரிய விழிப்போடு செயல்பட வேண்டும். மாதிரி நன்னடத்தை விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். புகார் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதுடன் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். அதன்மூலம் சுதந்திர மான, நியாயமான, வெளிப்படை யான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடிக்கு வரும் எந்தவொரு தகுதியான வாக்காளரும் தனது வாக்கை செலுத்தாமல் திரும்பக்கூடாது என்பதை தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in