முகிலனை தேடும் முயற்சி; சிபிசிஐடி சரியாக செயல்படுகிறது: உயர் நீதிமன்றம்

முகிலனை தேடும் முயற்சி; சிபிசிஐடி சரியாக செயல்படுகிறது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மாயமான சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிப்பதில் சிபிசிஐடி காவல்துறை சரியாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முகிலனை மீட்பதற்காக மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுசுழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தர கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜூன் 6-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் மாயமானது தொடர்பான வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் மூன்றாவது முறையாக மூடி முத்திரையிடப்பட்ட உறையில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முகிலன் வட இந்தியாவில் இருப்பதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், முகநூல் பக்கத்தில் முகிலன் எங்கே என வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு போட்ட பதிவுக்கு,  ராஜபாளையம் காவல் ஆய்வாளர் முகமது கவுஸ், 'சமாதி' என பதிலளித்துள்ளதாகவும், இது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் அச்சம் தெரிவித்தார்.

அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், சிபிசிஐடி போலீசார் அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரிவித்தனர். விசாரணை புதிய புதிய கோணத்தில் நடந்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கின் விசாரணை பாதிக்கும் என்பதால் இந்த அறிக்கையில் உள்ள விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in