

தமிழக அரசின் 1,2,9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில் தேசிய கீதம் எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 3 ஊழியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ( (State Council of Educational Research and Training) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் கடந்த ஆண்டு 1, 3, 6, 9, பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நடப்பு கல்வியாண்டில் 2, 4, 5, 7, 8, 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய பாடப்புத்தங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கு மற்றும் சூழ்நிலையியல் புத்தகத்தில் அச்சிடப்பட்ட தேசிய கீதத்தில், 'ஜன கண மங்கள தாயக ஜயஹே' என்பதற்குப் பதிலாக 'ஜன கண மன அதி நாயக ஜயஹே' எனப் பிழையுடன் அச்சாகி உள்ளது.
மேலும் 'உச்சல ஜலதி தரங்கா' என்பதற்குப் பதிலாக 'உச்சல சலதி தரங்கா' என உள்ளது. இது ஆசிரியர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதேபோல் 9 மற்றும் 11-ம் வகுப்பு புத்தகங்களிலும் தேசிய கீதம் பிழையுடன் அச்சிடப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் 1,2,9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில் தேசிய கீதம் எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டது தொடர்பாக 3 ஊழியர்களிடம் தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.