இந்தி திணிப்பை உங்கள் கனவின் ஓரத்தில்கூட நினைத்துப் பார்க்காதீர்கள்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

இந்தி திணிப்பை உங்கள் கனவின் ஓரத்தில்கூட நினைத்துப் பார்க்காதீர்கள்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
Updated on
3 min read

தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன் கூட்டில் கல் வீசி மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துவிடலாம் என்று மத்தியில் உள்ள பாஜக. அரசு, தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க எத்தணிக்கக் கூடாது என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“இந்தி உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தவேண்டும்” என்று திரு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான “புதிய கல்விக்கொள்கை” வகுக்கும் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த்தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும்- மொழி  வாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும், “ப்ரீ ஸ்கூல் முதல் 12-ம் வகுப்பு வரை இந்தி வழிக் கல்வி” என்ற விபரீதமான நாட்டைப் பிளவுபடுத்தும்  பரிந்துரையை இந்தக் குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

1937-1940 வரை முதல் களம், 1948-1950 வரை இரண்டாவது களம், 1953-56 வரை மூன்றாவது களம், 1959-61 வரை நான்காவது களம், 1963-1965 வரை ஐந்தாவது களம்  எனப் பல முனை இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை தமிழர்கள்  கிளர்ந்து எழுந்து நடத்தி, பலர் இன்னுயிர் இழந்து - இளைஞர்களின் உயிர்த் தியாகத்தின் விளைவாக, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைத் தீர்மானம் திமுக ஆட்சிஅமைந்ததும் அண்ணாவால் 1968 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இன்றுவரை அந்த இரு மொழிக்கொள்கையே தமிழ்நாட்டில் சிங்க நடை போட்டு வருகிறது. “இந்தியாவில் உள்ள மொழிகளில் எது தகுதி உள்ள மொழி என்றால், அது “தமிழ்” “தமிழ்” என்று சொல்லத் தயக்கப்படமாட்டேன்” என்று சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா முழங்கியது இன்றைக்கும் இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25-ம் தேதியன்று அந்த மொழிப்போர்த் தியாகிகளுக்கு திமுக வீரவணக்கம்செலுத்தி வருவதை மத்தியில் உள்ள பாஜக அரசோ அல்லது அந்த அரசு அமைத்த இந்தக் குழுவோ மறந்து விட்டதா? அல்லது தமிழ்நாட்டில் உள்ள தமது பினாமி அதிமுக அரசை மிரட்டி, முதலமைச்சரின் கையை முறுக்கி- இந்தத்  திட்டத்தையும் நிறைவேற்றி விடுவோம் என்று கனவு காண்கிறதா? மொழி உணர்வு தமிழர்களின் ரத்தத்தில் இரண்டறக் கலந்தது.

அந்த ரத்தத்தில் “இந்தி” என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச்செலுத்த முயன்றாலும் அதை திமுக ஒருபோதும் சகித்துக் கொள்ளாது கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும். தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டுமொரு மொழிப் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு வழி அமைத்து விடாது என்றே இன்னும் நம்புகிறேன்.

அன்னைத் தமிழின் பெருமையைச் சீர்குலைக்கும் எவ்வித பரிந்துரைகளையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. புதிய வரைவுக் கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை பரிந்துரைத்ததோடு, “குருகுலக் கல்வி முறையைக் கொண்டு வர வேண்டும்”“சமஸ்கிருதத்தை அனைத்துப் பள்ளிகளிலும் உயர் கல்விநிறுவனங்களிலும் பயிற்றுவிக்க வேண்டும்” “எளிய முறையில் சமஸ்கிருதம் கற்கும் நூல்களை அதிக எண்ணிக்கையில் பள்ளிகளில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

“இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்தி ஆசிரியர்களை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி இந்தி கற்றுக் கொடுக்கச்சொல்ல வேண்டும்” “அதற்காக இந்தி பேசும் மாநிலங்களும், இந்தி பேசாத மாநிலங்களும் ஆசிரியர் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்” என்ற இந்தி பேசாத மக்களுக்குக் காலப் போக்கில் பேரபாயத்தை ஏற்படுத்தும் பரிந்துரைகள்.

அந்த வரைவு அறிக்கையில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அளிக்கப்பட்டுள்ள மிகச் சில பரிந்துரைகளின் மீதான நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் சிதைத்து விட்டது. ஆகவே புதிய வரைவுக் கல்வி கொள்கை – 2019-ன் நோக்கம் கல்வியின் தரத்தை உயர்த்துவது என்று நினைப்பதற்குப் பதில் - இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைக்  கட்டாயமாகத் திணிக்கவும், சமஸ்கிருதத்தைவம்படியாகப் பள்ளிகளில் புகுத்தி இளைஞர்களின் மனங்களைப் பாழ்படுத்தவும்  திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட உள்நோக்கம் நிறைந்த அறிக்கையே என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்” என்று பிரதமர் பண்டித நேருவின் உறுதிமொழி இன்னும் பாராளுமன்றத்தின் பதிவேடுகளில் இருக்கிறது. இரு மொழிக் கொள்கைத் தீர்மானத்தின் மீதுதமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று“ இனி பள்ளிகளில் இந்தி வேண்டாம்” என்று 50 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது இன்னும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருக்கிறது.

தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்ட “தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்” என்று சட்டம்நிறைவேற்றப்பட்டுள்ளது. மொழி பற்றிப் பரிந்துரை செய்யும் முன்பு இதுபோன்ற வரலாறுகளை இந்தக்குழு ஆராய்ந்ததாகவோ, அவற்றின் அடிப்படை நோக்கங்களைப் புரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை.

அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள மாநில மொழிகளின் வரலாறு தெரியாமலேயே இந்தி மொழி, சமஸ்கிருதம் போன்ற இரு மொழிகளைமட்டும் கட்டாயமாகத் திணித்து - ஒரு மும்மொழித் திட்டத்தை தமிழ்நாட்டிலும், இந்தி பேசாத மாநிலங்களிலும் புகுத்தி, அதன் மூலம் நாட்டைப் பேதப்படுத்தவும் இந்தக் குழு பரிந்துரையைச் செய்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் கேடுகெட்ட செயலாகும்.

ஆகவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழித்திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் கஸ்தூரி ரங்கன்  கமிட்டியின் பரிந்துரையை மத்திய பாஜக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியதுமே தங்களது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்து - இந்தக் கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்துவார்கள்.

பாஜக அரசின் மத ரீதியான - மொழி ரீதியான கலாச்சார மேலாதிக்க  “அஜெண்டாக்களுக்கு” எல்லாம் அடங்கி ஒடுங்கி ஆதரவுக் கரம் நீட்டும் அ.தி.மு.க அரசு  இதற்கும் “ஆமாம் சாமி” போடாமல்-, இப்போதே முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். வெளிப்படையாக எதிர்ப்பு காட்டி தடுத்து நிறுத்தும் தைரியம் இல்லையென்றால், கட்சியின் பெயரில் உள்ள “அண்ணா, திராவிட” என்ற இரு சொற்களையும் நீக்கிவிடவேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல் வீசி- தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று மத்தியில் உள்ள பாஜக அரசு - தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க எத்தனிக்கக் கூடாது. அப்படிப்பட்ட பேராசைக்கனவும் அதற்காகப் பிழையான  காரியமும் அவர்களுக்குப் பேரிடரை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in