Published : 05 Jun 2019 03:20 PM
Last Updated : 05 Jun 2019 03:20 PM

அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவர்களில் பலர் அரசு மருத்துவமனைகளில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என மருத்துவப் பணியாளராகப் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி 860 மருத்துவப் பணியாளர்களை கட்டாயப் பணியிட மாற்றம் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கான பணியிடமாற்றக்  கலந்தாய்வு மே மாதம் 31-ம் தேதி தொடங்கி ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் சரவணப்ரியா மற்றும் நிம்மி சிவகுமார் உள்ளிட்ட 15 மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தக் கலந்தாய்வு முறையான விதிகளைப் பின்பற்றி நடக்கவில்லை என்றும் மூத்த மருத்துவர்கள் கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், ஜூனியர்கள் பணியாற்றும் பணியிடங்களில் நீடிப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு 15 மருத்துவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x