மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பால்கனி இடிந்து விபத்து: 3 மாணவர்கள் படுகாயம்

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பால்கனி இடிந்து விபத்து: 3 மாணவர்கள் படுகாயம்
Updated on
1 min read

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள அரசு உதவிபெறும் ஆயிர வைசிய வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்ததில் மாணவர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டிடம் நீண்டகளாக சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் இன்று (புதன்கிழமை) திடீரென பால்கனி கட்டிடம்  இடிந்து  விபத்து ஏற்பட்டது.

இதில் பால்கனியில் நடந்து சென்ற 11-ம் வகுப்பு மாணவர்கள் சக்திவேல், குமரவேல், 12-ம் வகுப்பு மாணவன் வீரக்குமார் ஆகிய 3 பேர்  படுகாயமடைந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டு  அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று மாணவர்களும் தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள விளக்குத்தூண் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பழமை வாய்ந்த கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in