Published : 22 Sep 2014 11:02 AM
Last Updated : 22 Sep 2014 11:02 AM

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே யுள்ள தல்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி மகள் தாரணி (10). மகன் ராகவன் (8). துரைப்பாண்டி சகோதரர் ரமேஷ்குமார் மகள் சாருலதா (7). அதே ஊரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தாரணி 5-ம் வகுப்பு, ராகவன் 4-ம் வகுப்பு, சாருலதா 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இவர்களின் தாத்தா குருசாமிக்கு டீ கொடுப்பதற்காக 3 பேரும் வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி கண்மாய் கரை வழியாகச் சென்று தாத்தாவிடம் டீ கொடுத்துவிட்டு அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது ராகவன், சாருலதா ஆகியோர் குளிப்பதற்காக கண்மாய்க்குள் இறங்கிச் சென்றனர். தாரணி கரையில் அமர்ந்திருந்தார்.

முன்பகுதியில் சேறும், சகதியுமாக இருந்ததால் ஆழமான இடத்துக்கு ராகவனும், சாருலதாவும் சென்றனர். அப்போது திடீரென அங்கு 7 அடி ஆழம் நிறைந்திருந்த தண்ணீருக்குள் இருவரும் மூழ்கிவிட்டனர். இதைக்கண்ட தாரணி ஊருக்குள் ஓடிச் சென்று இத்தகவலைத் தெரிவித்தார். ஊர் மக்கள் ஓடிவந்து மீட்பதற்குள் ராகவன், சாருலதா ஆகிய இருவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x