Published : 06 Jun 2019 11:56 AM
Last Updated : 06 Jun 2019 11:56 AM
நீட் தேர்வால் உயிரிழப்புகள் தொடர்வதை அடுத்து, நீட் தேர்வை விலக்குவதே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள், நேற்று (மே 5) வெளியாகின. இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.ஸ்ருதி, அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்தார்.
அதேநேரத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரிதுஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா ஆகிய இருவரும் போதிய மதிப்பெண்கள் பெறாததால் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவிகளில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பட்டுக்கோட்டையில் மாணவி வைஷ்யா, திருப்பூரில் ரிதுஸ்ரீ ஆகியோர் நேற்று (6.6.19) தற்கொலை செய்து கொண்டது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. இத்தேர்வின் முடிவே வாழ்க்கையின் முடிவல்ல என்பதை மாணவர்கள் உணரவேண்டும்.
பெற்றோர்களும் மருத்துவம் ஒரு படிப்புதானே தவிர அது ஒன்றும் வாழ்க்கையல்ல என்பதையும் தன்னம்பிக்கையினை ஊற்றி வளர்த்திடவேண்டும். நேற்று அனிதா இன்று வைஷ்யா,ரிதுஸ்ரீ என உயிர்கள் உதிர்வதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.
அரசும் நிரந்தரத் தீர்வாக நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT